வான் மண்டலம் மாசு படாமல் இருக்க.
நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?
பத்து விழுக்காடு மட்டுமே நினைத்து பார்க்கின்றார்கள், பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான்...
பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது நாம் வளர்த்து விட்டுப் போக வேண்டும்...
நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் உயிர் வாயு (ஆக்ஸிஜன்) அதிகரித்து விடும்...
வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப் பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால்தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் தலைமுறையினர் உடல் குறைகளோடுதான் பிறப்பார்கள்...
நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய்பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது...
மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறோம்...
நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை...
ஆற்றில் இருந்து மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும்!, தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக் கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்...
புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. ஆண்டாண்டிற்கு மழைநீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும்...
இன்று உலகமே காற்று மாசினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது . குழந்தைகளில் 20 சதவீதத்தினர் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...
காற்று மாசு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமயமாதல் துவங்கி , பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்வதுவரை தொடர்கின்றது இந்த சிக்கல்கள்...
அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவினை குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்திட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்...
எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப் படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார சிக்கல்களை நாம்தான் சரி செய்து கொள்ள வேண்டும்...
அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு விழுக்காடு தெரியாமல்தான் புவியை மாசு படுத்தி கொண்டிருக்கிறோம்...
அதன் வீரியத்தையும், விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. அரசாங்கம் என்ன செய்யுமென்று நினைக்காமல் நம்மால் முடிந்த வழிகளில் பூமியைப் பாதுகாப்போம்...
ஆம் நண்பர்களே.
இன்றே உறுதிமொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதனை முறையாகப் பராமரிப்போம், நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்.
நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைப்போம். இப்படி சின்னச் சின்ன செயல்கள் செய்தாலே போலும் பூமி வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றி விடலாம்.
புதிதாய் பிறக்கும் இளம் தளிர்கள் நடைபழகும் பிஞ்சு மழலைகள், இப்பூவுலகில் நம்பிக்கையுடன் பாதம் பதிக்க, இவ்வுலகில் ஒரே உயிர்க்கோளும் நமது ஒரே வீடுமான பூவுலகைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்.