தென்காசி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது. தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அம்மா திட்ட முகாம். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம்செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அழிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத அதனடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் கிராமத்திலும், திருவேங்கடம் தாலுகா நடுவப்பட்டி, தென்காசி தாலுகா பாட்டப் பத்து, மின்னடிச்சேரி, வீரகேரளம்புதூர் தாலுகா மருக்காலங்குளம், ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் பகுதி-2, சிவகிரி தாலுகா அரியூர், கடையநல்லூர் தாலுகா பொய்கை ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது. மனுக்கள் அளிக்கலாம். மேற்கண்ட கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலைவசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற சேவைகள் தங்கள் கிராமத்திற்கு கிடைத்திடும் வகையில் வருவாய்துறை மக்களுக்கு ஆற்றிவரும் சேவையை துரிதப்படுத்தி மக்கள் பயனடைய இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தகுந்த ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது