சுரண்டை அருகே வேன் மீது லாரி மோதல் ஒருவர் பலி
சுரண்டை அருகே ஆம்னி வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.மற்றொருவர் படுகாயமடைந்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முகமதுஅலி மகன் சேக் முகமது (34). இவர் கடைகளுக்கு உணவு பண்டங்கள் சப்ளை செய்து வருகிறார். இவர் நேற்று சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி விலக்கு அருகில் ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.இதில் சேக் முகமது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிய சேக் முகமது மற்றும் லேசான காயமடைந்த வி.கே.புதூரை சேர்ந்த காதர்முகைதீன் மகன் முகமது மீரான்(41) ஆகிய இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அச்சன்புதூரை சேர்ந்த ஷேக் முகமது பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வி.கே. புதூர் எஸ்.ஐ.காஜா மொய்தீன் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் சுரண்டை சேர்ந்த முருகேசன் மகன் ஜெயக்குமாரிடம்(34) விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்